தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாய உற்பத்தி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பலரும் முந்தைய மாதங்களை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டண ரசீது வந்துள்ளதாக பகிர்ந்து வருகின்றனர். இதனால், மின் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளன.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சனைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்துக்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும், இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்துக்கு உள்ளாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். மின் தடையை முற்றிலும் அகற்றி, மின்சார கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசின் உடனடி நடவடிக்கை அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
