சென்னையின் உயிர்நாடியாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு பாதியாக குறைந்துள்ளது. கோடை வெயில் மற்றும் அதிகரித்துவரும் தண்ணீர் தேவையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி என்ற நிலையில், தற்போது 1624 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 50 சதவீதமாகும்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருவதும், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரும் இங்கு சேமிக்கப்படும். இந்த சேமிப்பு நீர், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைக்கேற்ப திறந்துவிடப்படும். தற்போது, பூண்டி ஏரியில் இருந்து தினமும் 307 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்தாலும், சென்னைவாசிகள் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியதில்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியில் 2963 மில்லியன் கனஅடி நீரும், புழல் ஏரியில் 2066 மில்லியன் கனஅடி நீரும் போதுமான அளவு இருப்பு உள்ளது. இந்த இருப்பு, கோடைக்காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய உதவும்.
மேலும், சோழவரம் ஏரியில் 210 மி.கனஅடி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 381 மி.கனஅடி, மற்றும் கடலூர் வீராணம் ஏரியில் 797 மி.கனஅடி என மற்ற ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. இதனால், இந்த கோடைகாலத்திலும் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.