சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மார்ச் 18 அன்று தொடங்கின. கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில், செங்கல் கட்டுமானங்கள், சாயக் கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் எனப் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக, 5-ஆம் கட்ட அகழாய்வின் போது, சேதமடைந்த நிலையில் வித்தியாசமான வட்ட வடிவப் பானையின் மேற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், சிறிய அளவிலான முழுமையான வட்ட வடிவப் பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்போடு, உடைந்த நிலையில் சாயக் கிண்ணங்கள், கருப்பு நிறப் பானை, வாய் அகன்ற இருவண்ண சுடுமண் பாத்திரம் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வுகள், கீழடியில் சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான தொன்மையான செங்கல் கட்டுமானங்கள் பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகளை உறுதிப்படுத்துகின்றன.
கீழடியின் தொடர் அகழாய்வுகள், தமிழ்நாட்டின் வளமான வரலாற்றையும், பண்டைய மக்களின் நாகரிகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள், மேலும் பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. MDTV 24×7 தொடர்ந்து இந்தத் தகவல்களை உங்களுக்கு வழங்கும்.