டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் 12 ஆண்டு கால சாதனையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஆல்-ரவுண்டர் கீரான் பொல்லார்ட் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் 2026 தொடரில், எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய பொல்லார்ட், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு பேசிய பொல்லார்ட், 'நாங்கள் எப்போதுமே வியந்து பார்க்கும் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, என்னை மன்னித்துவிடுங்கள் யுனிவர்ஸ் பாஸ், ஆனால் நாம் இருவருமே இப்போது உச்சத்தில் இருக்கிறோம்' என்று ஜாலியாகக் கூறினார். இப்போட்டியின் போது அவர் 81 ரன்களைக் கடந்தபோது, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். 39 வயதான பொல்லார்ட் இதுவரை 736 டி20 போட்டிகளில் விளையாடி 14,582 ரன்கள் குவித்துள்ளார். கெய்ல் 14,562 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும், 6 அல்லது 7வது வரிசையில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது என்றும், பலர் முன்னிலையில் விளையாட ஆசைப்படும் போது, யாராவது ஒருவர் பின்வரிசையில் வந்து போட்டியை முடிக்க வேண்டிய கடினமான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், அதை அவர் சவாலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக, பொல்லார்ட், கெய்ல், பிராவோ போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளை விட உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்துப் பேசிய பொல்லார்ட், தொழில்நுட்பத்தைப் போலவே கிரிக்கெட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது என்றும், தற்போது கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு தொழில் என்றும் கூறினார். தங்களை விமர்சித்தவர்கள் அனைவரும் இப்போது அமைதியாக அமர்ந்து தங்கள் சாதனைகளைக் கொண்டாடுவார்கள் என நம்புவதாகவும் அவர் பதில் அளித்தார்.