செந்தில் பாலாஜி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகி, அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இருவரும் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். நேற்று, எம்.எல்.ஏ. இளையராஜா பேர வழக்கில், செந்தில் பாலாஜி தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவர் இன்று திடீரென ஆஜராகவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் மட்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஆஜரானார். காலை முதல் மாலை வரை செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அசோக்குமாரிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இருப்பினும், செந்தில் பாலாஜி குறித்த கேள்விகளுக்கு அசோக்குமார் பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி சகோதரரிடம் போலீஸ் விசாரணை
