தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும், மதிப்புமிகு அடையாளமுமான கவிஞர் புவியரசு (96) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது.
கவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என தமிழ்மொழிக்கு வளமான பங்களிப்பைச் செய்தவர். 'கையொப்பம்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கும், 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகவும் சாகித்ய அகாதமி விருதுகளை இருமுறை பெற்றுள்ளார். 'வானம்பாடி' இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.
கவிஞர் புவியரசு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகளாலும், உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலக்கியத் துறையில் கவிஞர் புவியரசின் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கவிஞர் புவியரசுவின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.