முன்னாள் அதிமுக அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த இவர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நாளை நடைபெறும் இணைப்பு விழாவில், சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளார். இந்த விழாவில், அதிமுகவைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் தவெகவில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுக்கோட்டையிலிருந்து 200 பேருந்துகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.
சி.விஜயபாஸ்கருடன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் எனப் பலரும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளனர். மேலும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், திருச்சி வளர்மதி ஆகியோரும் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இணைப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜயை, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர். இந்த இணைப்பு நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.