ஐக்கிய அரபு அமீரக பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அழகிய வெளிப்பாடாக அமைந்த இளம் கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "நான் நெதர்லாந்தில் தான் இருக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படும் ஒரு பிரம்மாண்டமான திருவிழாவில் பங்கேற்றது போன்ற உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு அளித்தது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தி ஹேக் நகரம் இந்திய நட்புறவுக்கான ஒரு வாழும் அடையாளமாக திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நெதர்லாந்து அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை அவர்கள் எப்போதும் பாராட்டுவதாகவும், நெதர்லாந்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றிவரும் பங்களிப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியா இன்று மிகப்பெரிய கனவுகளுடன் முன்னேறி வருவதாகவும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அரை கடத்திகள் (Semiconductors) போன்ற துறைகளில் இந்திய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். உலகிலேயே 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும், உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவியுடன் கூடிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.