பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுதிகளின் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கட்டண உயர்வு, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளதாகவும், இது ஆன்மிக விரோதப் போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், 'பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
