தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, பிரதான வழி, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொஹரம் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் அரசு விடுமுறையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால், கூட்டம் அலைமோதி, பலர் மயக்கமடைந்தனர். குறிப்பாக, ரூ.100 கட்டண வரிசையில் காத்திருந்த பெண்கள் வெயிலின் தாக்கம் காரணமாக அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
தண்ணீர், நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாததால், கொளுத்தும் வெயிலில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பக்தர்களின் வசதியை மேம்படுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த திடீர் கூட்ட நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடு பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.