தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியமாகிறது என்பதை உணர்ந்து, முந்தைய கழக அரசால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமான இழப்பீடு வழங்குவது, மறு குடியமர்வு போன்ற முக்கியப் பணிகள் அனைத்தும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டதாகவும், இதற்காக அரசுத் தரப்பில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
இத்தனை பணிகள் முடிந்த பிறகு, அற்பமான அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுவதாக அறிவித்தால், அது அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்தப்படுவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அபாயம் உள்ளதாகவும், புதிய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மனதில் கொண்டு, பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தை ரத்து செய்வது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

