பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவம் குவெட்டா நகரின் சமன் பதக் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டி, பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், இதன் தாக்கத்தால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடந்த இடத்தில் மக்கள் கூடுவதைத் தடுக்க பல்வேறு துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பெஷாவருக்கு புறப்படவிருந்த ரயில் சேதமடைந்துள்ளதுடன், அதன் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பகிரப்படும் என்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுப்சாய் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.