பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதனை மீட்டெடுக்க டெஸ்ட் ஜாம்பவான் வீரர் யூனிஸ் கானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் வலியுறுத்தியுள்ளார். கராச்சியில் நடைபெற்ற யூனிஸ் கான் கிரிக்கெட் அகாடமி தொடக்க விழாவில் பேசிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மோசின் நக்விக்கு இந்த கோரிக்கையை விடுத்தார்.
முன்னதாக, மோசின் நக்வி யூனிஸ் கானை அழைத்து பேசியதாகவும், இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்றும் ரஷீத் லத்தீப் குறிப்பிட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் சரியான பாதையில் பயணிக்க வேண்டுமெனில், யூனிஸ் கானை தனது திட்டங்களில் பிசிபி தலைவர் இணைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் பின்தங்கிவிட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரஷீத் லத்தீப், தற்போது டெஸ்ட் போட்டிகளில் 7-வது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் 5 அல்லது 6-வது இடத்திலும், டி20 போட்டிகளில் 9-வது இடத்திலும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த மோசமான நிலையை தாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டை முதன்மையாகவும், தங்களை இரண்டாவதாகவும் கருதும் நேர்மையான, அனுபவமிக்க முன்னாள் வீரர்களை பிசிபி நம்ப வேண்டும் என்று ரஷீத் லத்தீப் கேட்டுக்கொண்டார். யூனிஸ் கான் போன்ற வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை இளம் வீரர்களை உருவாக்கவும் பெரும் பங்காற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் யூனிஸ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2000 முதல் 2017 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்களுடன் மொத்தம் 10,099 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 2009-ல் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது அவர்தான் அணியின் கேப்டனாக இருந்தார்.

