இந்தியா – ஆப்கானிஸ்தான்: மழை பாதிப்பால் 25 ஓவராகக் குறைந்த போட்டி

தர்மசாலா: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கனமழை காரணமாக 50 ஓவரிலிருந்து 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மாலை 5:45 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.

மதியம் 1:30 மணிக்கு தொடங்கவிருந்த இந்த ஆட்டம், தொடர் மழையால் தாமதமானது. மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மாலை 4:55 மணியளவில் மழை நின்றதும், மைதான ஊழியர்கள் களத்தை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5:15 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 5:45 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக, போட்டி 50 ஓவரிலிருந்து தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பவர்பிளே 5 ஓவர்களாகவும், ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 5 ஓவர்கள் மட்டுமே வீசவும் அனுமதிக்கப்படுவார்கள்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேகமூட்டமான வானிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், உலகக் கோப்பைக்கு முன் 15 முதல் 20 போட்டிகள் இருப்பதால் பல்வேறு வீரர்களை சோதித்துப் பார்க்க உள்ளதாகவும், இந்தப் போட்டியில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் என இரண்டு வீரர்கள் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் கூறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரின்ஸ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, தானும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகக் கூறினார். இந்தியாவில் நாங்கள் விளையாடும் முதல் இருதரப்பு தொடர் இது என்பதால் மிகவும் உற்சாகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். பிட்ச் அறிக்கை வழங்கிய முரளி கார்த்திக், ஆடுகளம் ஈரப்பதம் இன்றி காணப்படுவதாகவும், கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் பந்து வேகமாகப் பயணிக்கும் என்பதால், 25 ஓவர் போட்டியாக இருந்தாலும் 200 முதல் 220 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version