கோடை காலத்தை வரவேற்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் இன்று முதல் ரோஜா கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான கோடைவிழாவின் முக்கிய அம்சமாக, விஜயநகரம் ரோஜா பூங்காவில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்கள் இந்த ரோஜா கண்காட்சியைத் தொடங்கி வைத்ததோடு, அங்கு மலர்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த பல்வேறு பறவை உருவங்களையும் பார்வையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி ரோஜா கண்காட்சியில் அலங்காரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பறவையினங்களை மையப்படுத்தி, கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சிக்காக, சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான பறவை இனங்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அன்னப்பறவையும், 20 ஆயிரம் மலர்களால் ஹார்ன்பில் (இருவாச்சி) பறவையும், கழுகு, புல்புல், ஹங்கேரி பறவை உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வடிவங்களும் பூங்கா வளாகத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலர்களால் ஆன சிறிய அலங்காரங்கள், ரங்கோலி மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள செல்ஃபி ஸ்பாட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா முழுவதும் 4,310 வகைகளில் 33 ஆயிரம் ரோஜா செடிகள் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கி வருகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு என கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் ரோஜாக்கள் பூங்காவுக்கு அழகு சேர்க்கின்றன. இன்று தொடங்கிய இந்த ரோஜா கண்காட்சி, வரும் மே 18 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்களுக்கு நடைபெறும். கண்காட்சி தொடங்கியதிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ரோஜாக்களின் அழகையும், மலர்களால் ஆன பறவை உருவங்களையும் கண்டு ரசித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.