ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஒரு சிறிய தவறு கூட பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு பெங்களூரு பயணிக்கு நேர்ந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வயது விவரத்தில் ஏற்பட்ட ஒரு எழுத்துப்பிழை, ரமாகாந்த் என்ற பயணிக்கு ₹10,624 அபராதம் விதிக்க வழிவகுத்தது.
ஜூன் 23, 2026 அன்று, பெங்களூரிலிருந்து நாக்பூருக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2AC வகுப்பில் பயணம் செய்த ரமாகாந்த், டிக்கெட் பரிசோதனையின் போது சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரது டிக்கெட்டில் வயது 24 என்பதற்குப் பதிலாக தவறுதலாக 1 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், டிக்கெட் பரிசோதகர் ₹7,035 அபராதம் விதித்தார். இது எதிர்பாராத தற்செயலான தவறு என்றும், இதனால் எந்த சலுகையும் பெறவில்லை என்றும் பயணி விளக்கமளித்தார். அவரிடம் வயது மற்றும் அடையாளத்தை நிரூபிக்க அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்கள் அனைத்தும் இருந்தன.
இருப்பினும், ரயில்வே அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, டிக்கெட் அசல் விலையான ₹3,589 உடன் அபராதத்தையும் சேர்த்து மொத்தம் ₹10,624 வசூலித்தனர். இதனால் அதிருப்தியடைந்த பயணி, இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி புகார் அளித்தார். புகாருக்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், டிக்கெட் விவரங்களும் பயணிகளின் உண்மையான விவரங்களும் மாறுபட்டதால், ரயில்வே சட்டம் 1989, பிரிவு 138-இன் படி முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்ததாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, அதில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பது பயணிகளின் கடமை என்றும், ஏதேனும் தவறுகள் இருந்தால் ரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அருகிலுள்ள பிஆர்எஸ் கவுண்ட்டருக்குச் சென்று திருத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தச் சம்பவம் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.