ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் வரும் மே 20ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் மருந்து விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முறையற்ற ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. முறையான சரிபார்ப்பு இன்றி மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், ஒரே மருந்துச் சீட்டைப் பலமுறை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஆன்டிபயாடிக் மற்றும் போதை தரக்கூடிய மருந்துகள் எளிதாகக் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், மருந்து எதிர்ப்புத்திறன் (AMR) அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகத் தளர்வுகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதிமுறைகளை மீறி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, மின்-மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் விற்பனையால், லட்சக்கணக்கான மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தத் தொழிலை நம்பி வாழும் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். வரும் மே 20ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும், மே 20 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தின்போதும், அவசர கால மருந்துகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (AIOCD) தெரிவித்துள்ளது.