வட இந்தியாவில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் அனல் காற்று வீசி வருகிறது. இன்று டெல்லியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் 46 டிகிரியும், மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் 48 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வட இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை மிகவும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் இந்த வெப்ப அலை, இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாகவும், பரவலாகவும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட காற்றும், தீவிர சூரிய ஒளியும் சேர்ந்து உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பநிலையை வேகமாக உயர்த்தி வருகின்றன. பல நகரங்களில் பிற்பகல் உச்சகட்ட வெப்பம் தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக, கிழக்கு ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கிழக்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேகமூட்டம் இல்லாத வானம் மற்றும் பரவலாக மழை பெய்யாதது ஆகியவை நிலப்பரப்புகள் வேகமாக வெப்பமடைவதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வீசும் வெப்பமான மேற்கு மற்றும் வடமேற்குக் காற்று, நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. சமவெளிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, இயல்பை விட கணிசமாக அதிகமாக இருக்கும்போது, அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை என வரையறுக்கிறது.
வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி நீண்ட நேரம் நீடித்தால், அது ஆபத்தானதாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள், வெட்டவெளியில் பணிபுரிபவர்கள் மத்தியில் நீரிழப்பு, வெப்ப சோர்வு, வெப்பத் தாக்கம் போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது வட இந்தியாவின் பெரும் பகுதி ஒரு பெரிய வறண்ட வெப்பக் குவிமாடத்தின் கீழ் சிக்கியுள்ளதாகவும், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.