முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சீரமைத்து, 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' (வி.பி.-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
இதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. சட்டத்தின் 33-வது பிரிவு மற்றும் இதர பிரிவுகளின் கீழ் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இந்த வரைவு விதிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலங்கள், அமைப்புகள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வரைவு விதிமுறைகளில், நிர்வாக செலவுகள், குறைதீர்ப்பு முறைகள், சம்பளம் வழங்குதல், வேலைவாய்ப்பின்மைக்கான படி, மற்றும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் செலவுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

