சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியின் போது நேற்று மாலை வரை 90 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் 'சீனா டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்பதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குப் பிந்தைய பணிகளைச் சரியாகக் கையாள வேண்டும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் இந்த விபத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிடப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரிய விபத்துகளைத் தடுக்க, சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சீன சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 90 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியர்கள் சார்பாக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் சீன மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version