தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளின் காரணமாக, வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சில முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால், திருச்சி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில்கள் திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லாது. மேலும், எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இந்த வழித்தடங்களில் இயங்காது. செங்கோட்டை – ஈரோடு மற்றும் தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில்களும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கோவில்பட்டி போன்ற ரயில் நிலையங்களுக்குச் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பாலாருவி எக்ஸ்பிரஸ், லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களும் திருநெல்வேலி, கோவில்பட்டி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே, தென் மாவட்டங்கள் வழியாகப் பயணம் செய்யவிருக்கும் பயணிகள், தாங்கள் பயணிக்கவிருக்கும் ரயில்களின் இயக்க நிலை குறித்து தெற்கு ரயில்வேயின் அறிவிப்புகளைச் சரிபார்த்துவிட்டு பயணத்தைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.