கேரளாவில் ஷிகெல்லா நோய் பரவல் குறித்த அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கிணற்று நீர் மாசுபட்டதால், அங்கு பயிலும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிகெல்லா நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், கேரள அரசு நோய் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 126-க்கும் மேற்பட்ட புதிய ஷிகெல்லா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் ஆதாரங்களைச் சுத்திகரிப்பது மற்றும் சுகாதாரத்தைப் பேணுவது போன்ற பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஷிகெல்லா நோய் என்பது ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படும் குடல் தொற்று நோயாகும். இது அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவக்கூடியது. வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.