மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் கணினி வழித் தேர்வாக (CBT) நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இது OMR முறைக்கு மாற்றாக அமையும்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட அறிவிப்பின்படி, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'மாணவர்களின் எதிர்காலமே எங்களின் முதன்மையான நோக்கம். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மே 7 ஆம் தேதி புகார்கள் பெறப்பட்டன. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட யாரும் தப்ப முடியாது' என்று உறுதியளித்தார்.
மேலும், 'கல்வித் துறையில் செயல்படும் மாஃபியா கும்பல்களின் சதித்திட்டங்களால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. முறைகேடுகளுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படும். சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எழுத வரலாம், அரசு அவர்களுக்கு துணை நிற்கும்' என்றும் அவர் தெரிவித்தார். கணினி வழித் தேர்வு, OMR முறையை விட சிறந்தது என்றும், இது இணையக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ள உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.