மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குருகிராம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 30 லட்ச ரூபாய்க்கு வினாத்தாளை வாங்கிய ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவருக்கு அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (யுஜி) 2026 தேர்வு, வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, புதிய தேர்வு நடைபெறும் தேதி அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், ராஜஸ்தானின் ஜம்வா ராம் கரையைச் சேர்ந்த மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் என்ற சகோதரர்கள், குருகிராம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து ஏப்ரல் 26ஆம் தேதி 30 லட்ச ரூபாய்க்கு நீட்-யுஜி வினாத்தாளை வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு சகோதரர், சிகார் பகுதியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்தாளைக் கொடுத்துள்ளார். ஏப்ரல் 29ஆம் தேதி அவர்கள் அந்த வினாத்தாளைப் பலருக்கும் விற்றுள்ளனர். இந்த மோசடியில் சிகார் பகுதி ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளது.
சிகாரில் உள்ள எம்பிபிஎஸ் ஆலோசனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்டவாரியா, அந்த வினாத்தாளை வாங்கி, கேரளாவில் எம்பிபிஎஸ் படிக்கும் சிகார் மாணவர் ஒருவருக்கு 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த மாணவர் தேர்வுக்கு முந்தைய நாள் தனது தந்தைக்கு வினாத்தாளை அனுப்பியுள்ளார். அவர் தனது விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கும் வினாத்தாளைப் பகிர்ந்துள்ளார். மேலும், உத்திராகண்ட் மாநிலம் டேராடூனில் கைது செய்யப்பட்ட ராகேஷ் குமார் மண்டவாரியா, சுமார் 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது நாசிக்கிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் போலீசாரின் கூற்றுப்படி, மாணவர்களிடையே பகிரப்பட்ட ஒரு 'வேதியியல் கெஸ் பேப்பரில்' இருந்த 410 கேள்விகளில் சுமார் 120 கேள்விகள் அசல் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.