குஜராத்தின் காந்திநகரில் விறுவிறுப்பாக நடந்து வரும் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் அசத்தியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதிச் சுற்றாக அமையும் இந்தப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியின் மூன்றாவது நாளில், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய ஞானேஸ்வரி, 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோ எடையையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 106 கிலோ எடையையும் தூக்கி, மொத்தம் 194 கிலோ எடையுடன் அசத்தினார். இதன் மூலம், ஸ்னாட்ச் முறையில் வெள்ளிப் பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக வெண்கலப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
இந்த எடைப்பிரிவில் சீனாவின் ஜின்லான் ஜாவ் 216 கிலோவுடன் தங்கப் பதக்கத்தையும், வியட்நாமின் ஹோய் ஹூயோங் 195 கிலோவுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இந்த போட்டித் தொடரில் இந்தியா இதுவரை மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது. முதல் நாளில் இந்திய வீராங்கனை கோகம் கோஹர் 48 கிலோ பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானேஸ்வரியின் இந்த வெற்றி, இந்திய பளுதூக்குதல் துறைக்கு மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளது. தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருவது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் மேலும் பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.