தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 மாணவர்கள் உணவின்றி தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள், விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என்றும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.