காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியினர், பிறரை குறை கூறுவதற்கு தகுதியில்லை என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே, பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளையும் பறிக்கவில்லை. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சி செய்கிறீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், யாரையும் குறை கூற தகுதியில்லை என்பதே எங்கள் வாதம். இதில் என்ன அவதூறு கண்டீர்கள்?

மேலும், பழைய கூட்டணி பழக்கத்தின் காரணமாக, திமுகவின் ₹1 வரிக்கு 29 பைசா என்ற புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி இன்னும் 'கோமா' நிலையில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300-க்கு அதிகமாகவும் உயர்த்திய 'VB G RAM G' திட்டத்தை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா? கள நிலவரம் தெரியாமல் அந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள். எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356-ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சிதான். காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ்.

தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே. இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவது நியாயமா திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே?

எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version