நேர்மையான அதிகாரிகளை நீக்கும் தவெக அரசு: ஜோதி நிர்மலாசாமியின் பதவி விலகல்?

மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியைப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மார்ச் 2024-ல் மாநில தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் மே 2029 வரை நீடிக்கும்.

கடந்த ஆட்சிக் காலத்தில், ஜோதி நிர்மலா ஐஏஎஸ்ஸின் நேர்மை மற்றும் துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகளைப் பாராட்டி, ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு மாநில தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டது. இது அவரது நேர்மைக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு அவரைப் பதவி விலகக் கோரியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை இப்படிப் பணியிலிருந்து அகற்றுவது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த காலங்களில் திராவிடக் கட்சி ஆட்சிகளில், நேர்மையான அதிகாரிகள் எந்தவித தொந்தரவுமின்றி தங்கள் பணிகளைச் செய்து வந்தனர். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசின் செயல்பாடு அதற்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையர் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவரை, மாநில அரசால் எளிதாகப் பதவி விலகச் சொல்லவோ அல்லது தானாகப் பதவி நீக்கம் செய்யவோ முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 243K-இன் படி, மாநில தேர்தல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இணையான தகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு உள்ள அதே போன்ற மிகக் கடுமையான மற்றும் முறையான சட்ட நடைமுறைகள் மூலமாக மட்டுமே ஒரு மாநில தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க முடியும். முறைகேடான நடத்தை அல்லது கடமைகளைச் செய்ய இயலாத சூழல் போன்ற காரணங்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சுதந்திரமான மற்றும் நடுநிலையான உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநில தேர்தல் ஆணையருக்கு இத்தகைய கடுமையான பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், மாநில அரசின் தலையீடுகள் இன்றி தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதி செய்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மாநில தேர்தல் ஆணையரை பதவி விலகக் கோரியிருப்பது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களின் நியாயத்தன்மை குறித்தும் சந்தேகங்களை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version