கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாராயணன்புதூரைச் சேர்ந்த சபரிவர்மன் (33), அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், தென்தாமரைகுளம் போலீஸார் அவரது கடையில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சபரிவர்மனின் கடையில் இருந்துள்ளதாகக் கூறி, போலீஸார் அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 4 நாட்களாக விசாரணை கைதியாக சிறையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் சிறை அறையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடப்பதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
தங்கள் உறவினரான சபரிவர்மனை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

