இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு: அரசு மரியாதை அறிவித்த முதலமைச்சர் விஜய்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு. கே. பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். திரைத்துறையில் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

பிரபல இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் (73) இன்று (ஜூன் 27, 2026) காலை திடீர் மாரடைப்பால் காலமானார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தனது ஐம்பதாண்டு கால திரைப் பயணத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாக்யராஜ், 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'சின்ன வீடு' போன்ற பல அழியாத காவியங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை வைத்து 'ஆக்ரி ராஸ்தா' என்ற இந்திப் படத்தையும் இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவரை 'கலை வாரிசு' என்று பாராட்டியுள்ளார்.

'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) மதியம் 1:30 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவரது மறைவால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version