UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டின் பங்கேற்பை அதிகரிக்க இந்த சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி பெற முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள், நடப்பு ஆண்டில் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்கள் ஆன்லைன் மூலம் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, UPSC தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு பெரிய நிதி உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் பல இளைஞர்களை இத்துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.