சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2026 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த எம்.எஸ். தோனி இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்ற செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
டாஸ் வென்ற பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'எம்.எஸ். தோனி இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை' என்று தெரிவித்தார். மேலும், 'ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது' என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாக வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்ட வீடியோக்கள் பரவியதால், அவர் நிச்சயம் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இது சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே ஆடும் கடைசி போட்டி என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
ஆடுகளம் குறித்துப் பேசிய ருதுராஜ், பிட்ச் மிகவும் உலர்ந்த நிலையில் காணப்படுவதால் முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும் என்றும், பனிப்பொழிவு இருக்காது என்பதால் 180 முதல் 200 ரன்கள் எடுத்தால் அது தற்காத்துக் கொள்ளக்கூடிய சவாலான இலக்காக இருக்கும் என்றும் தெரிவித்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றமாக குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக அகீல் உசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகக் கூறினார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளே-ஆப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது சிஎஸ்கே அணிக்கு மிகவும் அவசியமாகும். 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே, ரன் ரேட் குறைவாக இருப்பதால், இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம். ஏற்கனவே 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் வென்று தனது பிளே-ஆப் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யத் துடிக்கிறது. தோனி விளையாடாவிட்டாலும், அவர் டக்-அவுட்டில் அமர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.