அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்கக் கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். கண்ணியத்துடனும், தர்க்கரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்றும், நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மாணவர் செய்தி நிறுவனமான ISNA-விடம் பேசிய அதிபர் பெசெஷ்கியான், 'பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது அறிவுக்கு ஒவ்வாத செயல். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என சிலர் கோஷமிடுகின்றனர். ஆனால், நாங்கள் பேசவில்லை என்றால் என்ன செய்வது? இறுதிவரை போராடுவதா? நாங்கள் கண்ணியத்துடன் உரையாட தயார். மக்களின் ஆதரவுடன் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் திறனும் நமக்கு உள்ளது. நாம் தர்க்கரீதியாகப் பேசி, தர்க்கரீதியான பதில்களைப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் நிலவும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதைக்க விடக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். ஈரானின் எதிரிகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், முன்னர் அவர்கள் மூன்று நாட்களில் இஸ்லாமிய குடியரசை கவிழ்க்க நினைத்ததாகவும், ஆனால் தற்போது பிளவுகளை விதைத்து முன்னேற சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் அதிபர் பெசெஷ்கியான் குற்றம் சாட்டினார். 'நாங்கள் வெளிநாட்டினரை மதிக்கிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம், தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்போம்' என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், 'ஈரானுக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படத் தொடங்க வேண்டும். இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சாது. காலம் மிகவும் முக்கியமானது' என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இது இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.