முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தான் நடிகர் விஜய்யைக் குறித்து பேசிய கருத்துக்களை மக்கள் மறந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் தன்னிடம் கூறிய அறிவுரைகளையும் அவர் சட்டமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். 'கொலை வாள்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகள் என்றும் அவர் விளக்கினார். தற்போது சிறையில் இருந்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் பேசிய மார்க்கண்டேயன், "எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது, 'முதல்வர் எது பேசியிருந்தாலும், நீங்கள் இவ்வளவு தடிமனான வார்த்தைகளில் பேசியிருக்கக் கூடாது' என்று அறிவுறுத்தினார். பாளையங்கோட்டை சிறையில் என்னை சந்தித்த உதயநிதி ஸ்டாலினும், 'நீங்கள் முதல்வரை இந்தளவிற்கு பேசியிருக்கக் கூடாது' என்றுதான் சொன்னார். கனிமொழியும், 'முதலமைச்சர் பேச்சிற்கு நாம் அறிவுப் பூர்வமாகதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். தடிமனான வார்த்தைகளை பேசியிருக்க வேண்டாம்' என்றுதான் சொன்னார். என்னை அறியாமல் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளுக்கு, அருள் கூர்ந்து மறந்துவிட வேண்டும்" என்று கூறினார்.
மேலும், அவர் சட்டமன்றத்தில், “கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” என்று பேசியுள்ளதை சுட்டிக்காட்டி, 'கொலை வாள்' என்ற வார்த்தையைச் சொன்னதற்காக தன்னை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய வரிகள் என்றும், எனவே சற்று பார்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். சிறைக் கதவுக்குப் பின்னால் இருந்துதான் இன்று இந்த அவையில் பேசுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை எடுத்துப் பார்த்தாலும், தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்களுக்கு இணையானவற்றை உருவாக்குவது எளிதல்ல என்று மார்க்கண்டேயன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல, உலக அரங்கிலும் தனித்த அடையாளத்துடன் விளங்குபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும், அவரது தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் எல்லா இடத்திலும் இருப்பார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், இது ஒரு கானல் நீர் பட்ஜெட் என்றும் அவர் விமர்சித்தார். தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டு, அவற்றையே தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ‘மாற்றத்திற்கான அரசு’ என்று கூறிக்கொண்டு, திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருப்பதுதான் த.வெ.க. அரசின் சாதனை என்றும் அவர் சாடினார்.
நீங்கள் சொன்ன மாற்றம் என்னவென்று பார்த்தால், இங்கே இருந்த மாடித்தோட்டம் அங்கே பூந்தோட்டம் ஆகியிருக்கிறது. இங்கே இருந்த அவகாடோ பழம், அங்கே பட்டர் ஃப்ரூட் ஆகியிருக்கிறது. இப்படிப் பெயர் மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கிறது. வேறு எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தனது உரையை முடித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
