சிவகாசி: பட்டாசு தொழில் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் கீர்த்தனா பேச மறுத்த சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர் பதவியையும் அலங்கரிக்கும் கீர்த்தனா, தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்கவும், தொழில் மேம்பாட்டிற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
வெற்றிக்குப் பிறகு விருதுநகர் வந்திருந்தபோது, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்து, இதற்கென ஒரு குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும், சனிக்கிழமை அன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஒரு விரிவான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று பிற்பகலில் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மாற்று கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சில பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அமைச்சர் கீர்த்தனா எந்தவிதமான பதிலும் அளிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டார். இதுகுறித்து உற்பத்தியாளர்கள் சிலர் கேட்டபோது, 'உங்களுடன் விரிவாகப் பேச எனக்கு மிகுந்த ஆசை. நேரம் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியிருப்பேன். ஆனால், சில காரணங்களால், காலத்தின் அருமையைக் கருதி, நாம் பிறகு விரிவாகப் பேசலாம்' என்று அமைச்சர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் தனியாக பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம், விருதுநகர், சிவகாசி என அடுத்தடுத்து 3 இடங்களில் பட்டாசு தொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அமைச்சர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசாதது பட்டாசு உற்பத்தியாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.