திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தலைவர்களும் பாராட்டும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் பேராதரவோடு வரலாற்றிலேயே சிறந்த அரசியல் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக வாக்களிக்காதவர்கள் கூட சந்தோஷமாக வாழும் வகையிலான நல்லாட்சி நடந்து வருகிறது. அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை; செயலில் காட்டினால் போதும். நமது முதல்வர் தனது செயல்பாடுகள் மூலமாகவே இந்த ஆட்சியைச் சிறந்த நல்லாட்சியாக மாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.
கோயில்களில் தரிசனத்திற்கு லஞ்சம் வாங்கும் செயல்கள் ஏற்கெனவே 80 சதவீதம் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நாம் தமிழர் கட்சியினர் 15 ஆண்டுகளாகப் பயிற்சி, பயிற்சி எனப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு தலைவருக்கு எதிராக வெறுப்பு அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, உண்மையான வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு சீமான் பேசினால், நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்துத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதுகுறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும், பட்ஜெட் நிலைக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.
மேலும், "தான் ஓடி ஒளியவில்லை என கூறும் செந்தில் பாலாஜி இவ்வளவு நாட்களாக எங்கு காணாமல் போயிருந்தா? தைரியமாக வந்து நின்று, நீதிமன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், "இந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.
கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் அபகரிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாகத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். கோவில் சொத்துக்கள் எவ்வித சமரசமுமின்றி முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

