சட்டசபையில் உள்ள மேஜை, மைக், இருக்கைகள் போன்றவற்றை திமுக ஆட்சிக் காலத்தில் தாங்கள்தான் அமைத்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு, அவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டவை என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த மைக், சேர், டேபிள் ஆகியவற்றை நாங்கள் தான் செய்தோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில்தான் செய்யப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் 'அம்மா மினி கிளினிக்' என்பது 'முதல்வர் கிளினிக்' ஆக மாற்றப்பட்டது.
கல்வித் தந்தை பெருந்தலைவர் காமராஜர், 'நான் பத்து இடங்களுக்குப் போய் செல்வம் சேர்த்து வருவேன். நீ படிக்கும் வேலையை மட்டும் பார்' என்று தமிழகத்தின் கல்விக்கண்ணைத் திறந்தவர். எனவே, காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜரின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் பொருத்தமாக இருக்காது.
பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் நடந்தது. 'ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டி'யை 'எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம்' என்றும், 'அம்மா மருந்தகத்தை' 'முதல்வர் மருந்தகம்' என்றும், 'அம்மா பசுமை வீட்டை' 'கலைஞர் கனவு இல்லம்' என்றும் நீங்கள் பெயர் மாற்றினீர்கள். பெயர் மாற்றம் என்பது ஒன்றும் புதிதல்ல.
அதேபோல, 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயரை மாற்றி, அத்திட்டத்தை எங்கள் முதல்வர் மேலும் விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த காலை உணவுத் திட்டம், 203 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டவை என்று அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார். இந்த விரிவாக்கம் மூலம் பல குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
