தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் நலன் கருதி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
புதியதாக 'தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படும். 'ஓடி விளையாடு' என்ற திட்டத்தின் கீழ், தினமும் விளையாட்டு பாட வகுப்புகள் நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
திறன் மேம்பாட்டுக்காக, 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை 'திறன் பிளஸ்' திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 10.5 லட்சம் மாணவர்களின் திறன்கள் உறுதி செய்யப்படும். அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையில் 'தன்னிலை கற்றல் திட்டம்' செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் நோக்கில், 'மகிழ்வுடன் முன்னேறு' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாதத்தில் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்' ஆக கடைபிடிக்கப்படும். இது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித்துறையில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவில், 358 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. மேலும், 500 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு AI சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும். 2 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
தமிழ் வளர்ச்சித்துறையில், 'முதல்வரின் பெருங்கனவு' திட்டத்தின் கீழ் மீண்டும் உலகத் தமிழர்த் மாநாடு நடத்த ஆலோசனை நடத்தப்படும். கணினியில் தமிழை வளர்க்கும் இருவருக்கு 'இணைய தமிழ் செம்மல் விருது' வழங்கப்படும். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கூடுதலாக 5.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நகர்ப்புற துறையில், பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். வேலுநாச்சியார், ஈவெரா, அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோருக்கு சென்னையில் கோட்டம் அமைக்கப்படும். மேலும், சென்னையில் கழிவுநீரில் இருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் இயந்திரமயமாக்கப்பட்டு, ஒரு லட்சம் எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
