விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, அதிமுக, பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, பாஜகவின் தயவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, ஈ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸின் மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம் என்றும், திமுக, அதிமுக கூட்டணி முயற்சியால் அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளில் கட்சியே காலியாகி திமுக, அதிமுக தனித்து நிற்கும் என்றும், இருவரும் பாஜகவில் இணைந்து ஆளுக்கொரு கேபினட் அமைச்சர் பொறுப்பை வாங்குவார்கள் என்றும் அவர் கணித்தார். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க அவர்கள் இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது என்றும், ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறைதான் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார் என்றும், அந்த விளக்கத்தை தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மூத்த தலைவரான வைகோ, என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையம் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை மின்வாரியத்திற்கு பகிர்வது கட்டாயம் என்றும், தரவுகளை உடனுக்குடன் பகிராவிடில் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீட்டை கழித்து கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.