கடந்த ஆட்சியில் உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றியே அரசாங்கம் இயங்கியதாகவும், அப்போது 10 பேர் மட்டுமே வாழ்ந்ததாகவும், ஆனால் இந்த ஆட்சியில் எந்தவிதமான புரோக்கர்களும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், '5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 50 ஆண்டுகளும் அண்ணன் விஜய் ஆட்சிதான். இனி யாரும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம். 15 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்த கோரிக்கையை ஏற்று குவாரிகள் மூடப்பட்டுள்ளன. எந்த கடையில் குட்கா விற்றாலும் 100 எண்ணுக்கு அழைத்து தெரிவித்தால், உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்' என்றார்.
மின்சாரத் துறையை சீரமைக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும், மின்னுற்பத்தி தொழிலில் ஈடுபட தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் பெறப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். 'தனியார் மின்னுற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க தி.மு.க ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்டனர். இனி யாரும் 25 லட்சம் கொடுக்க தேவையில்லை. ஊழல் செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள். மின்வாரியம் தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.