தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிப்பது, அவை ஊடுருவும் வழிகளைத் தடுப்பது, முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வராமல் தடுப்பது ஆகியவை குறித்து அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சிறைக்கைதிகளுக்கு தேவையான பழங்கள் போன்றவற்றை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் வகையில் உள்வாரிச் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க சிறைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது' என்றார்.
மேலும், சிறைக்கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை நவீனப்படுத்துதல், முறைகேடுகளைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு முதல்வரின் ஒப்புதலுடன் தேவையான நிதிகள் பெற்று நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.