தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மாநிலத்தின் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். இந்த முயற்சிக்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அமைச்சர் கீர்த்தனா தனது ரீல்ஸ் பதிவில், 'தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம். கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார். நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது. பிரச்சினைகளை என்னிடமும், முதல்வரிடமும் நேரடியாக கொண்டு செல்லலாம்' என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏஐ நகரங்கள், பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி, விண்வெளிப் பொருளாதாரம் போன்ற புதுமைகளை செயல்படுத்தும் சூழலை அரசு உருவாக்குவதாகவும், முதல்வர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரங்களில் ரீல்ஸ் மூலம் கவனம் ஈர்த்த கீர்த்தனா, தற்போது அமைச்சர் ஆன பின்னரும் அதே வழிமுறையை முதலீடுகளை ஈர்க்க பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அமைச்சர் ரீல்ஸ்களை வெளியிடுவதாக ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுப்பது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.