இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்த டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய 'தி 100 இயர் ப்ளூ பிரின்ட்' புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
"நமது முன்னோர்கள் தங்கள் உடலைப் பாதுகாத்த அளவுக்கு நாம் இப்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 'உணவே மருந்து' என்ற வாழ்க்கை முறையே சிறந்தது. எனவே, சத்தான மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்," என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலை நாடுகளில் மக்கள் வேலை முடிந்ததும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நம் நாட்டில் அவ்வாறு இல்லை. உடற்பயிற்சிதான் நோயற்ற வாழ்வுக்கு அடிப்படை என்பதை நாம் உணர வேண்டும். எது சிறந்த உணவு என்பது கூட தெரியாத அளவுக்கு நம் வாழ்வியல் மாறிவிட்டது.
குறிப்பாக, பிளாஸ்டிக் கவரில் சூடாக டீ வாங்கி அருந்துவது உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்கள் டீயில் கலந்து, நம் உடலில் சேர்ந்து புற்றுநோயைக்கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஒரு காலத்தில் அறிவார்ந்த சமூகமாக இருந்த நாம், இன்று படித்திருந்தும் முட்டாள்களாக மாறிவிட்டோம்.
வீடுகளுக்கு வருபவர்களுக்குப் பழங்களுக்குப் பதிலாக, அதிக சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்புகளை வாங்கி வருகிறார்கள். இதுபோன்ற பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இம்மாத இறுதியில் தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இடம்பெறும். மருத்துவத்துறைக்கு பல புதிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன," என்றார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பாகச் செயல்படும் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை பல்வேறு மாவட்டங்களிலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தாமல், அவற்றை மேம்படுத்தி செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட அப்பளங்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதால், அவற்றை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராசிட்டமால் மருந்தில் மிகக் குறைந்த அளவே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது என்றும், இது குறித்த விளக்கத்தை சுகாதாரத்துறை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்தார்.

