பலமுறை தோல்வியடைந்த ஒரு படத்துடன் ஒப்பிட்டு, ரீ-ரிலீசிலும் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என அண்ணாமலை கூறிய கருத்து குறித்து அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், 'மக்களின் உணர்வுகளையும், அவர்களின் உண்மையான எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளாமல் கூறப்படும் கருத்துக்கள் அரசியல் முதிர்ச்சியின்மையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் தொடர்ந்து பெற்று வரும் தலைமைக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் அளிக்கும் ஆதரவே இறுதியில் வெற்றி பெறும். முதல்வர் விஜய் வழிகாட்டுதலிலும், தமிழக அரசின் மக்கள் நலப் பணிகளிலும் மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆதாரமற்ற விமர்சனங்களை விட, மக்களுக்காக செய்யப்படும் பணிகளே வரலாற்றில் நிலைத்து நிற்கும். தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் மக்கள் நலனே எங்களின் முதன்மை நோக்கம். அதனை மக்கள் தெளிவாக உணர்ந்திருப்பதால், இத்தகைய கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்று தெரிவித்தார்.
மேலும் அவர், 'மக்கள் தீர்ப்பை மதிக்காத திமுக இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பாஜக பலமுறை முயற்சி செய்து தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்து, மீண்டும் ஒரு முயற்சி எடுத்துள்ளது. பலமுறை ஃபிளாப் ஆன படத்தை வேறு பெயரில் ரிலீஸ் செய்தால் எப்படி எடுபடும்? பாஜகவின் மற்றொரு முயற்சியே அண்ணாமலை. தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என மு.க.ஸ்டாலின் பேசுவது தங்களுக்குதான் சாதகம். அதிமுகவின் இந்த நிலைக்கு திமுகதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக மூலம் முதல்வர் ஆக நினைத்த இபிஎஸ்-யின் திட்டத்தால் தான் அதிமுகவினர் தவெக பக்கம் வருகின்றனர். 108 தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது' என்றும் விமர்சித்தார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை 99% இல்லை என்றும், செவிலியர் நியமனம் விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.