கடந்த ஆட்சி ஊழல்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

கடந்த ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதாகக் கூறிய அவர், முந்தைய ஆட்சியில் நடைபெற்ற திட்டமிட்ட முறைகேடுகள், விதிமீறல்கள், லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலைகள் ஒதுக்காமல் ஏமாற்றிய சம்பவங்கள் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பறித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பல புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் இத்துறைகளில் முறைகேடுகள் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குதிரை பேர விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஊழல்கள் குறித்து புகார் அளிக்க வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version