தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், அனைத்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் அளிக்கப்படும் மரியாதையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தின் அடிப்படையில் இந்த ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1970 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.1393-இன் படி, பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, எந்தவொரு மதத்தினருக்கோ அல்லது பிரிவினருக்கோ தொடர்பு இல்லாத பாடலை பிரார்த்தனைப் பாடலாக வைக்க வேண்டும் என்ற அடிப்படையில், திரு. சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' நூலில் இருந்து ஆறு வரிகள் கொண்ட பாடல் பிரார்த்தனைப் பாடலாக வைக்கப்பட்டது.
பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.1037-இன் படி, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் தமிழக அரசின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
அந்த தீர்மானத்தில், 'தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து' 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்' என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானித்தது.
இந்த தீர்மானத்தின் நகல், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக செயலாளரிடமிருந்து பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதல்-அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை ஏற்று, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது. இந்த அரசாணை, 1970 ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

