முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய ஆட்சியின் போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களிடம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், மற்றும் நெருக்கமானவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் பெற்றதாகவும், ஆனால் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளை ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பல புகார்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும், விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது என்றும், ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version