கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், காவிரி ஆறு டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்றும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மேகதாது அணை கட்ட புதிய விரிவான திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், இத்தகைய முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் ஏற்கக்கூடாது என்றும், 2018-ல் அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சியை தமிழக முதல்வர் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசுடன் பேசி, அணை கட்டும் முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.