தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் திமுகவை குறை கூறுவதற்கு பதிலாக, தாங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, 'இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள் ரீல்ஸ் போட்டு முதலீடுகளை அழைக்கிறார்கள். அந்த ரீல்ஸ் எத்தனை பேரை ஈர்க்கும் என தெரியவில்லை. ரீல்ஸ்க்கும் ரியாலிட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழக அரசை எடுத்துச் செல்கின்றனர்' என்று விமர்சித்தார்.
'கவர்ச்சி அரசியல் என்று சொன்னால் கோபம் வருகிறது. கவர்ச்சி அரசியல் செய்யாமல் களப்பணி செய்தா ஆட்சிக்கு வந்தீர்கள்? ஆட்சியை அமைத்துவிட்டு, அமைச்சர் பதவிகளையும் வைத்துக்கொண்டு இன்னமும் திமுக ஆட்சியைதான் குறை சொல்கிறார்கள்' என பிரியா குற்றம் சாட்டினார். மேலும், 'ஒரு content trend பண்ற Virtual warriors உங்களுக்கு மண்டைல எதாவது இருக்குதா? ஒரு கண்டெண்ட் போடுறீங்க… போடுற கண்டெண்ட்டுல எது உண்மை? எது பொய் என பார்ப்பது கிடையாது. இது ஒன்றும் திரையில் ஓடுகிற படம் கிடையாது. இது தமிழ்நாடு, ஒரு மக்களின் வாழ்வாதாரம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'விஜய் கார்ல வர்றப்பயாவது ஸ்கிரிப்ட் பேப்பரை இன்னும் 5 தடவை படிச்சிட்டு வந்துருக்கலாம்' என மேயர் பிரியா கடுமையாக விமர்சித்தார். போலியான வாக்குறுதிகளை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள், திமுகவை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.