நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் டெல்லியில் தொடங்கி சென்னை வரை பரவி, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பல மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.
மேலும், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதுடன், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் தலைநகரில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சி.ஜே.பி போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும், பிரகாஷ் ராஜ், ஷபானா அஸ்மி போன்ற நடிகர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
நடிகர்கள் சோனு சூட், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, சித்தார்த், ரேவதி, அதிதி ராவ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'அதிகார அடக்குமுறைக்கு எதிராக குரல் எத்திசையில் இருந்து ஒழித்தாலும் அத்திசைக்கு நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பது என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக களமாடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், #BanNEET மற்றும் #SaveStudents என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் இணைத்துள்ளார்.
இதற்கிடையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்' என்று பதிவிட்டதை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், 'தமிழ் சினிமாவில் முதல் மானஸ்தனின் குரல். மற்ற பெரிய நடிகர்கள் சைலன்ட் மோடில்' என்று கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளப் பதிவில், 'போராட்டங்களுக்கு பணிந்து போகும் முன்னுதாரணத்தை உருவாக்க அரசு விரும்பாததால், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார். அவர்கள் தங்களது அதிகாரத்தையும், வலிமையையும் மிகுந்த திட்டமிடலுடனும், கவனத்துடனும் உருவாக்கியுள்ளனர். அதனால் பலவீனமானவர்களாக தெரிவதை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். இன்று ஒருவரது பதவி பறிபோனால், நாளை பலரது பதவி பறிபோகும் நிலை ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி ராவ் ஹைதரி, 'ஒவ்வொருவருக்கும் அரசியல் விருப்பங்கள் வேறுபட்டு இருந்தாலும், அவற்றிற்கு மேலாக மனிதாபிமானமே முதன்மையாக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் மரியாதை, கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது மாணவர்களே நாட்டின் எதிர்காலம்' என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடி வரும் மாணவர்களுக்கு எதிராக அரசின் அடக்குமுறையை கண்டிக்கிறோம். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஆதரவு கொடுத்த ஒவ்வொருவரும் தடுக்கப்பட்டதும், 21 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதும் கவலையளிக்கின்றன' என பதிவிட்டுள்ளார்.
